Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கராச்சி:அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக்குக்கு அருகே கடந்த 26-ந் தேதி இந்திய மீனவர்கள் 17 பேர் 3 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர், மீனவர்கள் 17 பேரும் தங்கள் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக கூறி, அவர்களை திரும்பிச்செல்லுமாறு எச்சரித்தனர்.
ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீனவர்கள் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அங்கேயே மீன்பிடித்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து 17 மீனவர்களையும் கைது செய்த பாகிஸ்தான் அதிகாரிகள், அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், கராச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அரபிக்கடலில் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி பாகிஸ்தான் அரசு அடிக்கடி இந்திய மீனவர்களை கைது செய்து வருகிறது. நீண்ட மற்றும் மெதுவான சட்ட நடவடிக்கைகளால், இவ்வாறு சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் பல மாதங்களுக்கும் சில நேரங்களில் ஆண்டுக்கணக்கிலும் பாகிஸ்தானில் சிறையில் வாடும் சூழல் இருப்பது குறிப்பிடத்தக்கது.